Saturday 25 March 2017

சிட்டுக்குருவி...... சிங்கப்பூரில் 25.03.2017

சிட்டுக்குருவியொன்று
அலகுகுத்தி சிறகசைத்து
நேசமிசைத்து நெருங்கிநடந்தது
என்னருகே.

அதன் மகிழ்வான தருணமிது
என்பதறிந்து
காரணிகளை ஆராய்ந்தேன்.

சிட்டுக்குருவி
எல்கேஜி சேரவில்லை.
வேலைதேடும் வேலையில்லை.
இன்னும்
திருமனமாகவில்லை.
சொத்துசேர்த்துவைக்கவில்லை.
வங்கியில் கடனில்லை.
வருமானவரி கட்டவில்லை.
சாதகம் பார்ப்பதில்லை
சர்க்கரை நோய் அறியவில்லை.
காதலித்து நோகவில்லை.
மிக முக்கியமாய்
கவிதையெழுதும் வழக்கமில்லை.

வேறென்ன இருக்கப்போகிறது
அகன்ற வானில்
ஆனந்தபவணிவர.......

No comments:

Post a Comment